Search This Blog

Monday, December 21, 2009

நிகழ்வுகள்

1903 ஜுலை 15: குமாரசாமி - சிவகாமி அம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார்.

1907: தங்கை நாகம்மாள் பிறப்பு.

1908: திண்ணைப் பள்ளியிலும், ஏனாதி நாயனார் வித்தியாவிலும் கல்வி பயின்றார்.

1909: சத்திரிய வித்தியாசாலாவில் சேர்க்கப்பட்டார்.

1914: ஆறாம் வகுப்பு படித்துக் கொண்ருக்கும்போது பள்ளி செல்வத்தை நிறுத்திக்கொண்டார்.

1919: ஏப்ரல் மாதம் ரௌலட் சட்டத்தை எதிர்த்து காந்தியடிகள் விடுத்த அழைப்பை ஏற்று காங்கிரசின் முழுநேர ஊழியரானார். இதே ஆண்டில் சத்தியமூர்த்தியை சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியது.

1920: ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு கொண்டார்.

1923: மதுரையில் கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டார்.

1927: சென்னையில் ‘கர்னல் நீல்’ சிலையை அகற்றும் போராட்டம் நடத்தஅண்ணல்காந்திஜிடம்அனுமதிபெற்றார். ஆனால் போராட்டம் நடைபெறுவதற்கு முன்பே நீல் சிலை அகற்றப்பட்டது.

1926: மதுரைக்கு வருகைபுரிந்த சைமன் குழுவை எதிர்த்தார். வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டு கைது செய்யப்பட்டார். 2 ஆண்டு சிறைத் தண்டனை பெற்றார்.

1936: காரைக்குடியில் நடைபெற்ற காங்கிரஸ் கமிட்டி தலைவரானார். யுத்த நிதிக்குப் பணம் தரவேண்டாம் என்று மக்களிடையே பிரச்சாரம் செய்த்தால் அந்நிய அரசால் கைது செய்யப்பட்டு, வேலூர் சிறைக்கு அனுப்பட்டார்.

1941 மே - 31: சிறையிலிரிந்த காமராஜர் விருதுநகர் நகராட்சி மன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1942-45:
ஆகஸ்டு புரட்சியின் காரணமாக சிறைவாசம் அனுபவித்தார்.

1946 மே 16: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக தேர்தலில் வெற்றிப்பெற்றார்.

1949-1953: இலங்கைக்குச் சுற்றுப்பயணம் சென்றார்.

1954 பிப்ரவரி: மலாய் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். முதலமைச்சர் இராஜாஜி ராஜினாமா செய்தார். நிலைமையை சமாளிக்க சட்டமன்றக் காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்குக் காமராஜர் போட்டியிட்டு வென்றார்.

1954 ஏப்ரல் - 13: தமிழக முதலமைச்சரானார். இடைத்தேர்தலில் குடியாத்தம் தொகுதியில் போட்டிட்டு வென்றார். 1963 வரை முதலமைச்சராக இருந்தார்.

1961: சென்னையில் மாநகராட்சி உருவாக்கிய காமராஜர் சிலையை நேரு திறந்து வைத்தார்.
1963 அக்டோபர் - 2: காமராஜர் திட்டத்தின் படி (K Plan) பதவியை ராஜினாமா செய்தார்.

1964 - 67: அனைத்திந்திய காங்கிரசின் தலைவராகப் பணியாற்றினார்.

1964 மே - 27: பிரதமர் நேரு மறைந்தார். சாஸ்திரியை பிரதமராக்கினார் காமராஜர்.

1966 : பிரதமர் சாஸ்திரி மறைந்தபோது இந்திரா காந்தி பிரதமர் ஆவதற்குத் துணை செய்தார்.

1966 ஜுலை 22: சோவியத் நாட்டில் இருபது நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.

1967: பொதுத் தேர்தலில் காமராஜர் தோல்வியுற்றார். சி.என். அண்ணாதுரை முதல்வரானார்.

1969: நாகர்கோவில் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

1975 அக்டோபர் - 2: காமராஜர் மறைந்தார்.

1976: மத்திய அரசு காமராஜர் நினைவு அஞ்சல் தலையை வெளியிட்டது. ‘பாரத ரத்னா விருது வழங்கியது.

1977: தமிழ்நாடு சட்டப்பேரவையில் காமராஜர் படம் குடுயரசுத் தலைவர் நீலம் சஞ்சீவ ரெட்டியால் திறந்துவைக்கப்பட்டது.

1978: சென்னை தியாகராய தகரில் காமராஜர் வாழ்ந்த இல்லத்தை நினைவு இல்லமாக்கியது தமிழக அரசு. மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு காமராஜர் பெயர் சூட்டப்பட்டது.

1984 ஜீலை - 15: விருதுநகரைத் தலைமை இடமாகக் கொண்டு காமராஜர் மாவட்டம் உருவாகியது.

சிந்தனைகள்

காமராஜரின் சீரிய சிந்தனைகள், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நெறியுடன் செம்மையாய் வாழ வழிவகுக்கும் வித்த்தில் அமைந்துள்ளன. அவரது சிந்தனையில் உதித்த சீரிய கருத்துக்களை இப்போது காண்போம்.

பொறுமையைக் கடைப்பிடியுங்கள்

இப்போதுள்ள அரசியல் தலைவர்கள் பலர் மக்களிடம் உங்களுக்கு நான் அதைச் செய்கிறேன், இதைச் செய்கிறேன் என்று சொல்லி தேவையில்லாத வாக்குறுதிகளை வழங்குகிறார்கள்.

தேவையான செயல்களைக்கூட செய்ய மறுக்கிறார்கள். அவசரப்பட்டு சில செயல்களைச்செய்து அவமானத்திலும் அமுங்கிப் போகிறார்கள். அவசரத்தில் அள்ளித் தெளித்த கோலங்களாக சில அரசியல் தலைவர்கள் இருப்பது மிகவும் வருத்தமளிக்கும் விஷயமாகும்.

“பதறும் காரியம் சிதறும்” என்பார்கள். திட்டமிடாமல் அவசரப்பட்டு செய்யப்படும் செயல்கள் முடிவில் பிரச்சனைகளை ஏற்படுத்தும், மேலும் அவமானங்களை உருவாக்கும்.

இதனை உணர்ந்த பெருந்தலைவர் காமராஜர் நிதானமாகச் செயல்படுவதற்கு எளிய வழியாக “ஆகட்டும் பார்க்கலாம்” என்னும் வார்த்தைகளை உபயோகித்து வந்தார்.
எந்தக் காலத்திலும் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது பெருந்தலைவரின் சிந்தனையாகும்.

வீண் வம்புக்கு விலகிவிடுங்கள்

நம்மீது குறை சொல்பவர்களைக் கண்டால் நமக்கு எரிச்சல் வரும். நம்மீது வேண்டுமென்றே குறை சொன்னால் எரிச்சலோடு கோபமும் சேர்ந்து வரும். சில வேளைகளில் மற்றவர்கள் வீண் வம்பு செய்து நம்மைச் சண்டைக்கு இழுப்பார்கள்.
இதனால் நிலைகுலைந்து நிதானம் இழந்து செயல்படவும் வாய்ப்புள்ளது. இந்த மாதிரியான காலகட்டங்களில் பிரச்சினை கொடுப்பவரை விட்டு விலகி இருப்பது விவேகமான செயல் ஆகும்.

வீணாக வம்புக்கு வந்தாலும் அவர்களோடு சண்டையிடாமல் ஒதுங்கிக் கொள்வது நல்லது.

இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் அவர்கள் தமிழக இளைஞர் காங்கிரஸின் தலைவராக இருந்த நேரம் கட்சியிலுள்ள மூத்த தலைவர்கள் பலர் குமரிஅனந்தன் அவர்களுக்கு உரிய மரியாதை தர வில்லை. பல்வேறு வித்த்திலும் அவரைத் தொந்தரவு செய்தார்கள்.

குமரி அனந்தன் சமாளித்துப் பார்த்தார். முடியவில்லை. பொறுமையின் எல்லைக்கே சென்றுவிட்ட குமரிஅனந்தன், முடிவில் பெருந்தலைவர் காமராஜரிடம் சொன்னார்: மூத்த தலைவர்கள் தனக்கு இடைஞ்சல் செய்கிறார்கள்” என்பதைச்சொன்னால் காமராஜர் கண்டிப்பாக அவர்களை அழைத்துக் கண்டித்து, திருத்துவார் என எதிர்பார்த்தார் குமரிஅனந்தன்.

காமராஜர் நீ போகிற இடத்தில் ஒரு பெரிய பாறை இருக்குதுன்னா என்ன செய்வே? அதை அசைத்து தள்ளி வச்சிட்டாப் போவே! இல்லைன்னா அதைச் சுற்றித்தானே போவாய். அதைப் போல் சுற்றிப்போயேன் என்று சொன்னார். பெருந்தலைவரின் சீரிய வழிகாட்டல் கேட்ட குமரி அனந்தன் அமைதியாகிவிட்டார்.

வீணாக வம்புச்சண்டைக்கு இழுப்பவர்களை விட்டு விலகிவிடு என்பது கர்மவீர்ர் காமராஜரின் அன்புக் கட்டளை ஆகும்.

படிக்கும் போது அரசியல் வேண்டாம்

அரசியல் என்பது அறிவுள்ளவர்களைக் கூட சில வேளைகளில் அழித்துவிடும். அதுவும் மாணவப் பருவத்தில் குறிப்பாக இளம்பருவத்தில் அரசியலில் மாணவர்கள் ஈடுபடும் போது உணர்ச்சிகள் மேலோங்கி இருப்பதால் படிப்பு பாழாக வாய்ப்புள்ளது. கவனம் சிதறிவிடுவதால் படிப்பில் அக்கறை இல்லாமல் கோஷ்டி சேர்ந்து படிப்பை நிறுத்திக் கொண்டவர்களும் இருக்கிறார்கள்.

மாணவர்கள் தம்மோடு இருந்தால் அரசியலில் தனிபலம் கிடைக்கும் என்று இளம் இரத்தங்ளைத் தனது கட்சியின் வளர்ச்சிக்காக உரமாக்கிச் செயல்படுபவர்களும் உண்டு. ஆனால் காமராஜர் அரசியல் தலைவராக இருந்தாலும் மாணவர்கள் எப்போது அரசியலுக்கு வரவேண்டும் என்பதைத்தெளிவாகத் தெரிந்து வைத்திருந்தார்.

ஒருமுறை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் அரசியலில் ஈடுபட்டுப் பிரச்சனைகளைச் சந்தித்திருந்தனர். அவர்கள் அப்போது முதலமைச்சராக இருந்த பெருந்தலைவர் காமராசரைக் காண்ச் சென்னை சென்றார்கள். அவர்களிடம் காமராஜர்.

படிக்கும்போது மாணவர்களுக்கு அரசியல் வேண்டாம்; படிப்பை முடித்த பின்பு எந்த அரசியலில் வேண்டுமானாலும் ஈடுபடுங்கள் என அவர்களுக்கு அறிவுரை கூறினார். மேலும் அவர்கள் பிரச்சனைக்குத்தீர்வு ஏற்பட உதவினார்.

படிக்கும்போது அரசியல் வேண்டாம் என்பது படிக்காத மேதையின் பண்புள்ள சிந்தனையாகும்.

உழைத்து வாழ வேண்டும்

இப்போதெல்லாம் உழைக்காமல் பிழைக்க வேண்டும் என்பதைச் சிலர் மனதில் கொண்டு சும்மா இருக்கிறார்கள். உடலுழைப்பு செய்யவும் தயாராக இல்லை. மூளை உழைப்புக்கும் தயாராக இல்லை. எனவே சோம்பலுடன் திரியும் கூட்டம் அதிகமாகிவிட்டது. ஒருநாடு வளர்ச்சிப் பெற வேண்டுமானால் அந்த நாட்டின் மக்கள் அனைவரும் உழைக்க வேண்டும்.

ஒருமுறை ஆவடியில் காங்கிரஸ் மாநாடு சிறப்பாக நடந்தது. மாநாட்டில் ஜவஹர்லால் நேருவும், கலந்து கொண்டார். மாநாட்டில் கலந்து கொண்ட பெருந்தலைவர் காமராஜர் “கடுமையான உழைப்பே மக்களை வறுமையிலிருந்து மீட்கும். சமதர்மச் சமுதாயம் மலர வன்முறை தேவையில்லை.

காந்திஜி காட்டிய வழியில் சமதர்மச் சமுதாயத்தை அமைப்போம்” எனப்பேசி மக்களின் மனதில் இடம்பெற்றார்.

உழைத்து வாழ வேண்டும் என்பது உத்தமர் காமராஜரின் சத்திய மொழியாகும்.

வீரமுடன் வாழுங்கள்

“நோயினால் மடிந்தவர்களைவிட பயத்தினால் இறந்தவர்களே அதிகம்” என்பார்கள். எதற்கெடுத்தாலும் நாளும் பயந்து வாழுகின்ற மக்கள் உண்டு.

“அஞ்சி அஞ்சி சாவார் - அவர்
அஞ்சாத பொருளில்லை அவனியிலே”

என பாட்டுக்கொரு புலவர் பாரதியார் தெளிவாக நாட்டு மக்களின் நிலையை அன்றேபடம் பிடித்துக் காட்டினார். “கோழையாய் வாழ்வதைவிட வீரனாகச் சாவதே மேல்” என்பது நாட்டுப்பற்று மிக்க நல்லவர்களின் கருத்தாகும்.

நம் நாட்டு விடுதலைக்காகத் தூக்குக் கயிற்றை முத்தமிட்டவர்கள் ஏராளம். குண்டடிபட்டுச்செத்தவர்கள் ஏராளம். குண்டாந்தடியால் தாக்கப்பட்டவர்கள் ஏராளம். நாட்டுக்காக - விடுதலைக்காக, பாடுபட்ட நல்லவர்கள் வாழ்ந்த நம் நாட்டில், காமராஜர் வாழ்க்கையிலும் ஒரு சம்பவம் நடந்தது.

1949ஆம் ஆண்டு திருச்சியில் ஒருபொதுக்கூட்டம் நடந்தது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த காமராஜர் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும்போது சிலர் குழப்பம் உண்டாக்க வெடிகளை வீசினார்கள்.

மேடை அருகே வெடி வெடித்ததும் கூட்டம் கலைய ஆரம்பித்தது.

உடனே காமராஜர் “கூட்டத்தில் குழப்பம் உண்டாக்க நினைப்பவர்கள் இது மாதிரி வெடிப்பதில் பலனில்லை. வீரமிருந்தால் என் நெஞ்சில் துப்பாக்கியால் சுடுங்கள். காந்தியடிகளைக் கோட்சே சுட்டுக் கொன்றான். அதனால் காந்தியடிகள் அமரரானார். அதைப் போலவே பெருமை எனக்கும் கிடைக்கட்டும். வீரப்பரம்பரையிலே வந்தவர்கள் வியாதியில் கஷ்டப்பட்டு இறந்தார்கள் என்பது பெருமை கிடையாது” என அஞ்சாது உரையாற்றினார். கூட்டம் அமைதியானது.

வீரமுடன் வாழ்வதே விவேகமான செயலாகும் என்பது “பாரதரத்னா” காமராஜரின் சீரிய சிந்தனையாகும்.

எளிமையோடு இருங்கள்

எளிமையைக் கடைப்பிடிப்பதன்மூலம் சிறப்பான வாழ்க்கை வாழலாம் என்பதைக்கர்மவீர்ர் காமராஜர் அடிக்கடி உணர்த்தி வந்தார். முதலமைச்சராகப் பணி யாற்றிய காமராஜர் ஒருமுறை மதுரை விருந்தினர் மாளிகையில் தங்க நேரிட்டது.

மின்சாரக் கோளாறு காரணமாக அப்போது மின்விளக்குகள் விருந்தினர் மாளிகையில் ஒளி வீசவில்லை. ரிப்பேர் செய்ய ஆட்கள் வந்திருந்தார்கள். அப்போது காமராஜர் “நான் படுக்க வேண்டும். எனவே அறையினுள் இருக்கும் கட்டிலை எடுத்து வந்து அந்த வேப்பமரத்தின் கீழ் வையுங்கள்” என்றார்.

வேப்பமரத்தின் கீழ் கட்டிலைக் கொண்டுவந்தார்கள். காமராஜர் கட்டிலில் படுத்துக்கொண்டார். அப்போது காமராஜரின் அருகில் காவலுக்காக ஒரு போலீஸ்காரர் நின்றார். அந்தப்போலீஸ் கார்ரைப் பார்த்த காமராஜர் “நீங்கள் ஏன் இங்கு நிற்கிறீர்கள். நீங்கள் போய் படுங்கள். என்னை யாரும் தூக்கிச் செல்ல மாட்டார்கள்” என்று கூறி அனுப்பி வைத்துவிட்டார்.

தனது காவலுக்கு பல்வேறு படைகளோடு உலா வரும் அரசியல்வாதிகள் மத்தியில் காமராஜர் வித்தியாச மானவராக திகழ்ந்தார்.

சட்டத்தை மதித்திடுங்கள்

முதலமைச்சராகப் பெருந்தலைவர் காமராஜர் பதவியில் இருந்த நேரம் ஒருநாள் இரவு கூட்டத்தில் கலந்துகொண்டு தனது வீட்டுக்குக்காரில் திரும்பினார்.

சென்னையில் ஒரு வழிப்பாடை ஒன்றில் கார் சென்று கொண்டிருந்தது. அந்த வழியில் கார் செல்ல அனுமதி இல்லை. எனவே உடனே காமராஜர் காரை நிறுத்தச் சொன்னார்.

“ஏன் கார் செல்ல அனுமதியில்லாத பாதையில் செல்கிறார்? காரைத்திருப்பு” என டிரைவரிடனம் கண்டிப்புடன் சொன்னார். “ஐயா, இந்த ராத்திரி நேரத்தில் போக்குவரத்து ரொம்ப குறைவாகத்தானே இருக்குது. இந்தப்பாதை வழியே போனால் சீக்கிரம் வீட்டுக்குப் போய்விடலாம்” என்றார் டிரைவர்.

“இரவு நேரமென்றால் எப்படி வேண்டுமானாலும் போகலாமா? கூட்டம் இல்லை என்று இப்போது போனால் இது எப்போதும் பழக்கமாகிவிடும்.

சட்டத்தை இயற்றும் நாமே சட்டத்தைப் பின்பற்றவில்லை என்றால் மற்றவர்கள் சட்டத்தை எப்படி கடைப்பிடிப்பார்கள். முதலமைச்சர் என்றால் எப்படியும் போகலாமா?” என டிரைவரிடம் கூறிவிட்டு ஒழுங்கான பாதையில் செல்லுமாறு கட்டளையிட்டார்.

“சட்டம் இருந்தால் அதனை யாராக இருந்தாலும் மதித்து நடக்க வேண்டும்” என்பது காமராஜரின் எண்ணமாகும்.

ஒற்றுமையோடு வாழுங்கள்

கருத்து வேறுபாட்டினால் ஒருவருக்கொருவர் சண்டைப்போடுவது நல்லதல்ல. ஒற்றுமையுடன் வாழ்வதே சிறந்தது. முன்னேற விரும்புகிறவர்கள் ஒற்றுமையுடன் வாழ வேண்டும். என்பதை வலியுறுத்தினார் காமராஜர். 1960ஆம் ஆண்டு வேலூரில் நடைபெற்ற தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில்பேஇய கமராஜர்,

“குறுகிய உணர்ச்சிகளில் மனதைப் பறிகொடுத்துச் சண்டைப்போடக்கூடாது. இருப்பவர்கள் வேண்டுமானால் தாராளமாகச்சண்டைப்போட்ட்டும்; பணக்காரர்களுக்கு வேறு வேலையில்லை யென்றால் அவர்கள் சண்டையிட்டுக் கொள்ளட்டும். எங்களை விட்டுவிடுங்கள், நாங்கள் எல்லோரும் ஒரே இனம், அதாவது பட்டினிப் பட்டாளம்: எங்களைச் சண்டைக்குக் கூப்பிடாதீர்கள்.

வடக்கிலிருந்தாலும், தெற்கிலிருந்தாலும், தமிழன் என்றாலும் வங்காளி என்றாலும் ஏழைகள் எல்லோரும் ஒரே இனம்தான். நமக்குச்ச்ணைட் போட நேரமில்லை. நான் முன்னேற விரும்புகிறோம்” எனக் குறிப்பிட்டார்.

“ஒற்றுமையே முன்னேற்றத்திற்கு அசைக முடியாத நம்பிக்கை அடித்தளம்” என்பது காமராஜரின் வாக்கு.

உழைப்புக்கு ஏற்ற கூலி கேளுங்கள்

காமராஜர் ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டு பேச இருந்த நேரத்தில் கூட்டத்திலிருந்த சிலர் “உழுபவனுக்கே நிலம் சொந்த்ம்” என ஓங்கி குரல் கொடுத்தார்கள். வர்களை அமைதியாக இருக்கும்படி சைகை காட்டினார். காமராஜர். பின்னர் பேசும் போது நீங்களெல்லாம் குரல் எழுப்பவது போல எல்லோரும் கேட்க ஆரம்பித்தால் “நூற்றுக்குத் தொண்ணூறு சதவீத மக்கள் பட்டினியால் கிடக்க வேண்டிய நிலை உருவாகிவிடும்.” என்றார் கூட்டம் அமைதியானது. எல்லோரும் காமராஜர் என்ன சொல்லப்போகிறார்? என ஆர்வத்துடன் இருந்தனர்.

‘உழுபவனுக்குநிலம் சொந்தம்’ என நாம் சொல்கிறோம். நெற்கதிரை அறுப்பதற்குச் செல்லும் தொழிலாளர்கள் ‘கதிர் அறுப்பவர்களுக்கே நெல் சொந்தம்’ என்றுசொல்லி நெற்கதிர்களை அவர்கள் வீட்டுக்கு எடுத்துச்சென்று விட்டால் கஷ்டப்பட்டு உழைத்த தொழிலாளர்களின் நிலை என்ன ஆகும்?

பின்னர் நெல்லை அரிசியாக ஆக்குவதற்கு அரிசி ஆலைக்குக் கொண்டு போகிறோம். அங்கு நெல்லை அரைத்துக் கொடுத்தவர் ‘தனக்கே அரிசி சொந்தம்’ என்று சொல்லிவிட்டால் நெல் உரிமையாளர்கள் நிலை என்னவாகும்?

வெறும் கையோடுதானே திரும்ப வேண்டிய நிலைவரும். கடைசியில் சோறு சொந்தம்’ ன்று சொல்லிவிட்டால் எல்லோர் நிலையும் என்ன ஆகும்? பட்டினிதானே? இந்த நிலை நாட்டில் ஏற்படக்கூடாது.

“உழைக்கும் ஒவ்வொருவருக்கும் தங்கள் உழைப்புக்கு ஏற்றவாறு கூலி கேட்க வேண்டும் எனபதுதான் நல்லது” என எளிமையாக விளக்கம் தந்தார் காமராஜர் இந்தச் சம்பவம் காமராஜர் முதலமைச்சராகப் பணியாற்றிபோது சிவகிரியில் நடந்தது ஆகும்.
“உழைப்புக்கு ஏற்ற கூலி கேட்பதே சிறந்தது” எனப்து காமராஜரின் கருத்து ஆகும்.

லஞ்சம் வாங்காதீர்

ஒருமுறை பெருந்தலைவர் காமராஜரும், எழுத்தாளர் சாவியும் ஊட்டியில் சந்தித்தார்கள். முதலமைச்சராக இருந்த காமராஜர், எழுத்தாளர் சாவியை அருகில் அழைத்து “ஊட்டி ஏரியை சுற்றுலாப் பயணிகள் வந்து தங்கும் வகையில் அழகு படுத்தணமுமாம். அதற்கு என்ன செய்ய வேண்டும் என நான் வந்து பார்க்க வேண்டுமாம். வாருங்கள் படகில் போய்வருவோம்” என்றார்.

படகு சவாரி செய்யும்போதே “ஊட்டினா.. அது பணக்கார்ர்களுக்கு மட்டும் உரிய இடம் என்ற நிலை இருக்கக்கூடாது. அதை ஏழைகளும் அனுபவிக்க வேண்டும். இந்த ஏரியைச்சுற்றி நிறைய மரங்கள் உள்ளன. இந்த மரங்களுக்கு நடுவே சின்ன காட்டேஜ்கள் கட்டி குறைந்த வாடைக்குக் கொடுக்க வேண்டும். சமையலுக்கு பாத்திரங்கள் கூட அரசாங்கமே கொடுத்திடனும். வாடையாக பத்து ரூபாய்க்கு மேல் வசூலிக்கக்கூடாது.

ஆனால் படுபாவிங்க இங்கே மரத்தைக்கூட வெட்டிவிடுகிறார்கள். மரத்தை வெட்டக்கூடாது என்று சட்டம் இருக்கிறது. சட்டம் இருந்த என்ன பலன்? கலெக்டரைக் கூப்பிட்டு நல்ல சாப்பாடு போட்டுவிட்டால்பதும் ‘வெட்டிக்கொள்ளுங்கள்’ எனச் சொல்லிவிடுவார்ள் என்ற மிகவும் வருத்தத்தோடு காமராஜர் சொல்லிக்கொண்டே போனார்.

படகு போய்க்கொண்டே இருந்தது. சிறிது நேரத்தில் “அதோ அங்கே பாருங்கள் இப்போதுதானே இதைப்பற்றிச் சொன்னேன்” என்றார் காமராஜர்.

அங்கே பார்த்தால்… ஒருபெரிய மரம் வெட்டப்பட்டு சாய்ந்து கிடந்தது. கலெக்டருக்கு நல்ல சாப்பாடு கிடைத்துவிட்டதாக நினைத்தாராம் எழுத்தாளர் சாவி.

அரசப் பணியில் இருப்பவர்கள் லஞ்சம் வாங்கிவிட்டு தகாத செயல்களுக்கு துணை போக்க்கூடாது” என்பது காமராஜரின் கொள்கையாகும்.

ஏழைகளுக்கு உதவிடுங்கள்

முதல்வராக இருந்தபோது பெருந்தலைவர் காமராஜர், சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு நிறைய ஊர்களில கதர் துண்டுகள் போர்த்தி மரியாதை செய்தார்கள். நிறைய துண்டுகள் போர்த்தப்பட்டதைக் கவனித்த ஒரு தீவிர தொண்டர், “இவ்வளவு துண்டுகளையும் வைத்து காமராஜர் இனி என்ன செய்வார்? நம்மைப் போன்ற தொண்டர்களுக்குத்தானே கொடுக்கப்போகிறார்” என்று எண்ணி ஒரு பெரிய துண்டை எடுத்து தனக்கு வைத்துக்கொண்டார்.

கூட்டம் முடிந்து தங்கும் இடத்திற்கு வந்ததும் அந்த தொண்டரைக் காமராஜர் அழைத்து “ஒரு துண்டை நீ எடுத்து வைத்திருக்கிறாய் அல்லவா? அதை அந்த மூட்டையில் சேர்த்துவிடு” என்றார். அந்தத் தொண்டர் அதிர்ந்து நின்றார். “ஒரு சாதாரண துண்டை எடுத்ததற்கு இவ்வளவு தூரம் நினைவு வைத்து தலைவர் கேட்டுவிட்டாரே” என மனம் வருந்தினார்.

“தம்பி உனக்கு நான் வேறு நல்ல துண்டு வாங்கித் தருகிறேன். ஆனால் இந்த துண்டை நாம் தொடக்கூடாது. ஏனென்றால்..இதெல்லாம் சென்னையில் உள்ள பாலமந்திர் என்ற ஏழைப் பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்குக் கொடுக்கக் கூடியதாகும். ஏழைகளுக்கு உதவுவதற்காகவே இந்த ஏற்பாடு” என்றார் காமராஜர்.

“ஏழைகளுக்கு உதவிடுங்கள்” என்ற கருத்தை அழகாக விளக்கினார் காமராஜர்.

அரசியல்


1954 - ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப் ஏற்ற காமராஜர், தனது திட்டங்களாலும், மக்கட் தொண்டாலும், திட்டங்களைச் செம்மையாக அமுல்படுத்தியதாலும், தமிழகத்தில் பொற்கால ஆட்சியை உண்டாக்கினார்.

1959 - ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் தமிழ்நாடு காங்கிரஸ் காமராஜர் தலைமையில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றது. 151 சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்று சட்டசபைக்கு வந்தார்கள். காமராஜ் அவர்கள் மீண்டும் தமிழ்நாட்டின் முதல் அமைச்சராகப் பதவி ஏற்றார்.

இந்தக்கால கட்டங்களில் தான் தமிழ்நாட்டில் தொழில் வளம் பெருகியது. உணவுப்பொருள் பற்றாக்குறைகள் நீங்கியது. பள்ளிகளில் பயிலும் மாணவ- மாணவிகளின் எண்ணிக்கை வட்டக்கணக்கில் உயர்ந்தது. கல்வி கற்கும் ஆர்வமும் பெருகியது.

மிகவும் அமைதியான சூழ்நிலையில் தமிழ்நாடு எல்லாத்துறைகயிலும் வளர்ச்சியடைந்தது. இப்படிப் பட்ட சூழ்நிலையில் பொதுத் தேர்தல் வந்தது. 1962 - இல் நடந்த இந்தத் தேர்தலில் காமராஜர்சாத்தூர் தொகுதி சட்டமன்ற வேட்பாளராக நின்று வெற்றி பெற்றார். 1957 - இல் நடந்த தேர்தலில் 151 இடங்ககைப் பெற்ற காங்கிரஸ் 1962 - இல் நடந்த தேர்தலில் 139 இடங்களையே கைப்பற்றியது.

மூன்றாவது முறையாகத் தமிழ்நாட்டின் முதலமைச்சராகக் காமராஜர் பதவி ஏற்றார். காங்கிரஸ் உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்தாலும், காமராஜர், உழைப்பும், உற்சாகமும் குறைந்துவிடவில்லை. மனம் தளர்ந்தும் அவர் போய்விடவில்லை.

ஆனால் காங்கிரஸின் பலம் குறைந்ததற்கான காரணங்களைக் காமராஜர் ஆராயத்தொடங்கினார். மக்களிடம் ஆதரவு குறைந்ததற்கு உண்டான காரணங்களை ஆராய்ந்து கொண்டே, கடமை உணர்ச்சியுடன் தமிழக மக்களின் நல்வாழ்விற்காகப் பல திட்டங்களை வகுத்து அவைகளை நிறைவேற்றிக் கொண்டிருந்தார்.

தமிழ்நாட்டில் மட்டுமின்றி, இந்தியா முழுவதும் காங்கிரஸின் பலம் குறைந்திருந்ததால், அதற்கான காரணம் தெள்ளத் தெளிவாக்க் காமராஜருக்குப் புலப்பட்டது.

தலைவர்கள், பதவிகளில் இருக்கும் போது மக்களுடன் நேரிடையாகத் தொடர்பு கொள்ளவில்லை. திட்டங்கள் மக்களிடம் சென்றடைகிறதா என்பனவற்றை யாரும் கண்டறிவதில்லை.

ஆனாலும் தமிழகத்திலும், மத்திய ஆட்சியிலும் இருந்து மக்கள் காங்கிரஸை அகற்றிவிடவில்லை. குறைகளைத் தெரிவிப்பதற்காகவே குறைந்த அளவு வெற்றியைக் காங்கிரஸுக்கு அளித்திருக்கிறார்கள். அப்படியானால் பொதுமக்களின் குறைகளைத் தீர்ப்பது எப்படி?

மக்களின் குறைகள் தீர்க்கப்படாவிட்டால் அடுத்து வரும் பொதுத் தேர்தலில் காங்கிரஸ் பேரியக்கம் கவிழ்ந்து விடுமோ என்று காமராஜர் கவலைப்பட்டார். காங்கிரஸ்கார்ர்களிடையே, ஒவ்வொரு மாநிலத்திலும் கோஷ்டிப்பூசல்கள். நான் பெரியவன், நீ பெரியவன் - என்ற மோதல்கள் - பதவிச் சண்டைகள்.. இவைகள் இயக்கத்தில் மலிந்து இருந்தன.

மத்திய அரசு ஐந்தாண்டுத் திட்டங்களைத் தீட்டி அமுல்படுத்திக்கொண்டு இருந்தது. பண்டித ஜவஹர்லால் நேரு, பிரதமராக இருந்து, இந்திய நாட்டை ஒரு வலுவான நாடாக மாற்றிக்கொண்டு இருந்தார்.

ஊசி முதல் விமானம் வரை இறக்குமதிகள் செய்யப்பட்டுக் கொண்டு இருந்த நாட்டில், எல்லாமே சுதேசிக் கண்ணோட்டத்தோடு இந்தியாவிலேயே உற்பத்திகள் செய்யப்பட்டன.

பெங்களூரில் விமானத் தொழிற்சாலை, ஆவடியில் டாங்க் தொழிற்சாலை, பெரம்பூரில் இரயில் பெட்டித் தொழிற்சாலை, விசாக்ப்பட்டினத்தில் கப்பல் கட்டும் தொழிற்சாலை, இரும்புத்தொழிற்சாலை, உருக்குத் தொழிற்சாலை, நெய்வேலியில் நிலக்கரிச் சுரங்கம், சேலத்தில் ஸ்டீல் தொழிற்சாலை. திருச்சியில் துப்பாக்கித் தொழிற்சாலை. இப்படி இந்தியா வலுவடைந்து கொண்டிருந்தது. இருந்தும் காங்கிரஸ் ஆட்சி மீது, மத்தியிலும் மாநிலத்திலும் மக்களுக்கு நம்பிக்கை குறைந்து கொண்டு வருவது ஏன்?

காமராஜர் இளம் வயதிலேயே தன்னைத் காங்கிரஸில் இணைத்துக்கொண்டவர். தொண்டராக உள் நுழைந்து, உழைப்பால், தியாகத்தால் கொஞ்சம் கொஞ்சமாக உயர்வினை அடைந்தவர், சத்திமூர்த்தியைக் குருவாகப் பெற்றவர். குருவே, மாறுபட்டால், கட்சிக்காக அவரையே எதிர்த்தவர்.

ஒருமுறை காந்திஜியின் கருத்துக்கே எதிர்ப்புத் தெரிவித்துக் கடிதம் எழுதி, அவர் பத்திரிகையில் எழுதியவற்றை வாபஸ் பெறச் செய்தவர்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக 12 ஆண்டுகாலம் பதவி வகித்து முதலமைச்சராக ஆனபோதுதான் அந்தப் பதவியை ராஜினாமா செய்தவர். விடுதலைப் போராட்ட வீரர். பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றுப் பலமுறை சிறை சென்றவர். தன்னை முற்றிலும் மக்கள் தொண்டிலேயே ஆட்படுத்திக் கொண்டவர்.

இப்படிப் பட்ட தலைவருக்குத் தன்காலத்திலேயே, தன் கண் தன் முன்னாலாயே, கண்ணை இமைபோல் கட்டிக் காத்து வளர்ந்த காங்கிரஸ் பேரியக்கம் சரிந்து கொண்டே போவதைத் தாங்கிக் கொள்ளவா முடியும். முதலமைச்சர் பதிவியிலே இருந்தாலும், காமராஜர் அகில இந்திய அளவில் காங்கிரஸ் பேரியக்கத்தை வலுப்படுத்தவே, மக்களிடம் செல்வாக்கு உள்ள இயக்கமாக மீண்டும் மாற்றவே ஆர்வம் கொண்டார்.

நாட்டுப்பற்று


இளம் வயதிலேயே நாட்டுபற்று கொண்ட காமராஜர், செய்தித் தாள்களைத் தினமும் படித்து அரசியல் பற்றி தெரிந்து கொண்டார்.

நாட்டின் விடுதலைக்காக மக்கள் அப்போது போராடி வந்தார்கள். விடுதலைக்காகப்போராடுபவர்களை வெள்ளையர்கள் சிறை பிடித்தார்கள். கொடுமைப்படுத்தினார்கள்.

இந்நிலையில்தான் 1920 ஆம் ஆண்டு அவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி நடத்திய ஒத்துழையாமை இயக்கம் மற்றும் சட்ட மறுப்பு இயக்கத்தில் தீவிரமாகக் கலந்து கொண்டார்.

திருவனந்தபுரத்தில் மரக்கடை வியாபாரம் செய்யும் இன்னொரு தாய்மாமனாரான காசிநாடாரின் கடைக்கு அனுப்பினால் காமராஜரின் கவனம் தொழில் மீது பதியும் எனக் கருதிய தாய் சிவகாமி அம்மாள். காமராஜரைத் திருவனந்தபுரத்திற்கு அனுப்பி வைத்தார்.

காமராஜர் திருவனந்தபுரம் வந்த நேரத்தில் கேரளாவில் சாதிப் போராட்டங்கள் நடந்தன. இனவேற்றுமைக்கொடுமைகள் நீங்க ஈ.வெ.ரா. பெரியார் வைக்கம் போராட்டத்தை நடத்தினார். காமராஜர் அந்தப் போராட்டத்தை நடத்தினார். காமராஜர் அந்தப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். கேரளாவில் நடந்த எல்லா சுதந்திரப் போராட்டங்களிலும் கலந்து கொண்டு நாட்டு விடுதலைக்காகப்போராடினார்.

இதனால் காமராஜரின் கவனம் திசை திரும்பியது. தாய் மாமனார் மனம் வருந்தினார். விருதுபட்டியில் தொழிலில் கவனம் இல்லையென்று திருவனந்த புரத்திற்கு அனுப்பி வைத்தார்கள். ஆனால் இங்கு இப்படி தொழிலில் கவனம் இல்லாமல் காமராஜ் இருக்கிறாரே என எண்ணி மீண்டும் காமராஜரை விருதுப்பட்டிக்கு அனுப்பி வைத்தார்.

கல்வி

பெருந்தலைவர் காமராஜர் தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பொழுது கல்வி நிலை எவ்வாறு இருந்தது என்பதைச் சற்று சிந்தித்துப் பார்க்கத்தான் வேண்டும்.
எங்கும் கல்விக் கூடங்கள். எல்லோர்க்கும் கல்வி. இலவசக் கல்வி. இலவச மதிய உணவு என்றெல்லாமா இருந்தன? இல்லவே இல்லை. வசதியுள்ளவர்களுக்கே கல்வி கற்கும் வாய்ப்புக்கள் இருந்தன. ஏழை, எளியவர்களுக்குக் கல்வி கற்பது என்பது எட்டாக் கனியாகவே இருந்தது.

தனியார் பள்ளிகளில் மட்டுமின்றி, அரசினர் பள்ளிகளும் அன்று கல்விகற்கக் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டன. ஐந்தாம் வகுப்புவரைதான் கட்டணம் இல்லை. ஆறாம் வகுப்பில் இருந்து எட்டாவது வகுப்புவரை படிக்கும் ஏழை மாணவர்கள், தாங்கள் ஏழைகள்தான் என்பதற்கான வருமான அத்தாட்சியைத் தாசில்தார்களிடமிருந்து வாங்கிக் கொடுக்கவேண்டும். அப்படிக் கொடுத்தால்தான் இலவசக்கல்வி- இல்லையேல் கட்டணம் கட்டவேண்டும்.

ஒன்பதாம் வகுப்பிலிருந்து எல்லா வகுப்புக்களுக்கும், எல்லோரும் கட்டாயமாகச் சம்பளம் கட்டியே தீரவேண்டும். பள்ளி இறுதிப் படிப்பாக இருந்தாலும் சரி, அல்லது பட்டப்படிப்பாக இருந்தாலும் சரி. எல்லாவற்றிற்கும் படிக்கப் பணம் கட்டவேண்டிய நிலைதான் தமிழ்நாட்டில் நீடித்து இருந்து வந்தது.

பள்ளிக்கூடங்களில் பற்றாக்குறை ஒரு புறம். ஒரு ஊரிலிருந்து மறுஊருக்குப் பாதயாத்திரையாகவோ, பஸ் அல்லது சைக்கிள்கள் மூலமாகவோ சென்றுதான் ஆறாம் வகுப்புக்குமேல் படிக்கவேண்டிய சூழ்நிலை இருந்தது. அங்கொன்றும், இங்கொன்றுமாக ஆரம்பப்பள்ளிகள் இருந்தன. அதுகூட இல்லாத கிராமங்களின் எண்ணிக்கைகளோ கணக்கிலடங்காதவைகளாகும்.

”ஏதோ… நாலு எழுத்து எழுதப் படிக்கத் தெரிந்தால் போதும் - கையெழுத்துப் போட பிள்ளைகள் கற்றுக்கொண்டால் போதும்” என்றே அந்தக் காலத்துப் பெற்றோர்கள் கருதினார்கள். பிள்ளைகள் தங்கள் தொழிலுக்குத் துணையாக இருந்து வேலைகள் செய்வதையே அவர்கள் விரும்பினார்கள்.

”ஏன் ஐந்தாம் வகுப்போடு பையன் படிப்பை நிறுத்திவிட்டீர்கள்?” என்று கேட்டால்.

”அதுபோதுங்க… அதுக்குமேலே படிச்சுப் பையன் என்ன கலெக்டர் ஆகப் போகிறானா? இல்லை தாசில்தார் ஆகப் போகிறானா?” என்று பதில் கூறுவார்கள். ஆண் பிள்ளைகளுக்கே கல்வி கற்பதில் இந்தப் பரிதாப நிலை.

தபால் போக்குவரத்துக்கள் கூடக் கிராமங்களுக்குச் சரிவர இல்லாத காலமாய் இருந்தது. ஏழெட்டுக் கிராமங்களுக்கு நடுவில் உள்ள ஒரு பேரூரிலே ஒரு தபால் ஆபீஸ் இருக்கும். மூன்று, நான்கு கிராமங்களுக்கு ஒரு தபால்காரர் என்று அவர்கள் சைக்கிள்களில்தான் சென்று, மணியார்டர், மற்றும் தபால்களைப் பட்டுவாடா செய்து வருவார்கள்.

ஒரு தபால்கார்ர ஒரு கிராமத்துக்குத் தபால் மற்றும் வந்த மணியார்டரை எடுத்துக் கொண்டு சென்றார். அது ஒரு குக்கிராமம். ஏறத்தாழ எல்லோரும் எழுதப்படிக்கத் தெரியாதவர்கள்தான் ஒன்றிரண்டு பிள்ளைகள் படித்தவர்களாக இருந்தாலும், தபால்காரர் செல்லும்போது அவர்கள் பள்ளிக்கூடம் சென்றிருப்பார்கள்.

மருதாயி என்ற பெண்ணுக்குப் பட்டாளத்தில் இருந்த அவளது கணவன் ஏழுமலை 500 ரூபாய் மணியார்டர் செய்து இருந்தார். ஒரு கடிதமும் போட்டிருந்தார்.

சைக்கிளில் அந்தக் கிராமத்துக்குச் சென்ற தபால்காரர் எப்படியோ வீட்டு விலாசத்தை விசாரித்துக்கொண்டு, மருதாயி வீட்டுக்குப் போனார். வீடு பூட்டிக் கிடந்தது. பக்கத்து வீடுகளில் விசாரித்தார். அந்தப் பெண் வயலில் கூலி வேலைக்குப் போயிருப்பதாகவும், சாயந்திரம் தான் வருவாள் என்றும் கூறினர். தபால்காரர் மணியார்டர் வந்திருக்கும் சமாச்சாரத்தைச் சொல்லி யாராவது சென்று அவளைக் கூட்டிக்கிட்டு வரச்சொன்னார்.

ஒரு பெண்மணி வயல் பக்கம் ஓடினாள். தபால்காரர் சைக்கிளை வைத்துக்கொண்டு அந்தக் குடிசை வீட்டுக்கருகே வேப்பமரத்தடியில் காத்துக் கிடந்தார்.

அவர் காத்து இருந்ததற்கும் ஒரு காரணம் இருந்தது. மணியார்டரைப் பட்டுவாடா செய்துவிட்டால், ஐந்தோ பத்தோ பணம் தருவார்கள். அவருக்கு இது நிகர வருமானம்தானே.

வயல் பக்கம் போன பெண் அந்த மருதாயியைக் கையோடு கூட்டிக் கொண்டுவந்தாள்.

”சாமி! கும்புடுறேனுங்க” - என்றாள் மருதாயி.

”ஆமா ! உன் பேருதானே மருதாயி. உனக்குப் பட்டாளத்திலே இருந்து பணம் வந்திருக்கு ” என்றார் தபால்காரர்.

”அப்படிங்களாசாமீ! எம்புட்டுப் பணம் அனுப்பியிருக்காக?” என்றாள்.

”ஐநூறு ரூபாய்” என்றார் தபால்காரர்.

”ஐயோ! அவ்வளவு பணமா அனுப்பியிருக்காக” என்று அவள் ஆச்சர்யப்பட்டாள்.

”உன்னோட புருஷன் பேரு என்னம்மா?”

”அதெல்லாம் நாங்க சொல்லறது பழக்கமில்லேங்க.”

”பழைய பயித்தியமா இருக்கிறியே! புருஷன் பேரை எல்லாம் அந்தக் காலத்திலேயும் சரி, இந்தக் காலத்திலேயும் சரி யார்மா சொல்லாமே இருக்காங்க? கற்புக்கரசி கண்ணகிகூட அந்தக் காலத்திலே பாண்டிய மன்னன் கேட்டபோது,

”ஏசாச்சிரிப்பின் இசையிடம் பெருங்குடி
மாசாத்து வாணிகன் மகனேயாகி
என்காற் சிலம்பு பகர்தல் வேண்டி
நின்பார் கொலைக்கலம்பட்ட
கோவலன் மனைவி
கண்ணகியென்ப தென் பெயரே”

என்று, புருஷன் பேரு மட்டுமல்ல, மாமனார் பேரையும் சேர்த்தே சொல்லியிருக்கார்” என்று சொல்லித் தான் ஒரு படிப்பாளி என்பதைக் காட்டிக் கொண்டு நின்றார் தபால்காரர்.

”அவுங்க பேர்தானே வேணும்? சொல்லுகிறேன். ஒண்ணு ரெண்டு எண்ணுகிறேன். ஆறுக்கு அப்புறம் என்னங்க?”

”ஏழு… ஏன் அதற்கென்ன?”

”முருகன் ஏறி நிற்கிற எடம் எதுங்க?”

”ஓ… அதுவா? மலைதான்.”

” அந்த ஏழோட இதைச் சேர்த்துக்கங்க.”

”அடடே… ஏழுமலை. உன் புருஷன்பேரு ஏழுமலைதான். சரிதான்போ இந்தா இதிலே கையெழுத்துப் போடு.”

இடது கை கட்டைவிரலை நீட்டினால் மருதாயி. தபால்காரர் விரலைப் பிடித்து மை ஒட்டி மணியார்டர் பாரத்தில் அழுத்தி எடுத்துவிட்டு அவள் விரலை விட்டு விட்டார். பின்னர் பணத்தை எண்ணிக் கொடுத்தார்.கூட நின்ற பெண்களிடம் கொடுத்து மருதாயி எண்ணிப் பார்க்கச் சொன்னாள். எல்லாம் நூறு ரூபாய் நோட்டுக்கள். ஐந்துதானே. எண்ணிப் பார்த்துச் சரியா இருக்கிறதென்றாள்.

”சரிம்மா! இந்தா ஒம்புருஷன் போட்டிருக்கும் தபால்” என்று கடித்த்தையும் கொடுத்தார்.
” நான் வர்றேம்மா இன்னும் மூணு ஊர்களுக்கு போகணும்.” என்று சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பலானார் தபால்காரர்.

”கொஞ்சம் இருங்க சாமி” என்று மருதாயி தன் குடிசை வீட்டின் பூட்டைத் திறந்து கொண்டு உள்ளே போனாள். கூலிப் பணம் வாங்கிப் பானையில் போட்டுவைத்திருந்தாள். பத்து ரூபாய் பணம் எடுத்து வந்து தபால்காரனிடம் கொடுத்தார்.

”ரொம்ப நன்றிம்மா” என்று சொல்லிக்கொண்டே தபால்கார்ர் தன் சைக்கிளில் பறந்தார்.
கடுதாசியைப் படிச்சுக்காட்டாமப் போயிட்டாரே என்று மருதாயித் தவித்தாள். இவளைப் போலத்தான் கிரமத்துப் பெண்கள்.

கிராமங்களில் வாழ்ந்திருந்த பெண்பிள்ளைகளைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். பெண்கல்வி புறக்கணிக்கப்பட்டிருந்த காலம் அது. ” அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு?” என்று பெற்றோர்களே வாதிட்டுக் கொண்டுருந்த காலமாக அன்றிருந்தது. கல்வி கற்கக் கட்டணம் செலுத்த வேண்டியிருந்த நிலை நீடித்ததால் பெண்கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டது.

பணம் கட்டிப் படிக்கும் நிலை. பள்ளிக் கூடங்களின் பற்றாக்குறைகள். கல்வி என்பது ஏழை, எளியோர்களுக்கு இல்லை- என்பன எல்லாம் தமிழ்நாட்டில் எப்படி நீக்குவது? கர்ம வீரர் காமராஜர், முதலமைச்சர் காமராஜர் சிந்தித்தார். திட்டங்கள் தீட்டினார்.அமுல் படுத்தினார்.

முதல் வகுப்பில் இருந்து பள்ளி இறுதி வகுப்புவரை எல்லா மாணவர்களுக்கும் கட்டணம் இல்லை என்று அறிவித்தார். கிராமத்துச் சிறுமியர்கள் கல்வி கற்கப் பல மீட்டர்கள் தூரம் நடந்து சென்றுவர வேண்டி இருந்தது. இந்த நிலையைப் போக்கி, கிராமங்கள் தோறும் பள்ளிகள் திறக்க ஏற்பாடுகள் செய்தார்.

”கிராமங்கள்தான் இந்தியாவின் முதுகு எலும்பு” என்றார் மாகத்மாகாந்தி. கிராமங்கள் முன்னேறாமல் இந்தியா முன்னேற்றம் அடையமுடியாது என்று கருதினார் பண்டித நேரு. அவர்களது பாதையில் பயணம் துவங்கிய பணிகள் புரிய, அடி எடுத்து வைத்த காமராஜர் கிராமங்களின் முன்னேற்றத்திற்கு என்னென்ன செய்யமுடியுமோ, அவைகளை எல்லாம் தான் முதலமைச்சராக இருந்த கால கட்டத்தில் செம்மையாகச் செய்தார். செழிப்படையச் வைத்தார்.

காமராஜர் அவரகள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த போதே, தமிழகத்தில் உள்ள எல்லாப் பட்டி தொட்டிகளுக்கும், கட்சிப் பணிகளுக்காகச் சென்றிருக்கிறார். அவரது கால்கள் படாத கிராமங்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அவர் சுற்றுப் பயணங்கள் செய்திருக்கிறார்.

எந்தக் கிராமத்துக்கு என்னென்ன தேவைப் பள்ளிக் கூடமா? சாலை வசதியா? குடிநீரா? மின்சார வசதியா? எங்கெங்கே எவையெவை தேவை என்பதெல்லாம் கண்டறிந்து வைத்திருந்தார் காமராஜர். கட்சிப் பணிக்காக அவர் எடுத்த கணிப்பு (சர்வே) ஆட்சிப் பணியில் இருக்கும்போது அவருக்குப் பெரிதும் உதவியது. துரித நடவடிக்கைகள் எடுக்க அவரைத் தூண்டியது எனலாம்.

தமழக முதலவரான பின்னர், அவர் சுற்றுப் பயணம் போனார். அப்படிப் போகும்போது அவரது கார் கிராமத்துச் சாலைகள் வழியே போகிறது.

காலை நேரம். கிராமத்துச் சிறுவர் - சிறுமிகள், ஆடு - மாடுகளை ஓட்டிக் கொண்டு மேய்க்கச் சென்று கொண்டுத இருக்கிறார்கள். இதைக் கண்ட காமராஜர், காரை நிறுத்தச் சொன்னார். ஆடு, மாடுகளை ஓட்டிச் சென்று கொண்டிருந்த சிறுவர்களிடம் சென்றார்.
”என்னப்பா… தம்பிகளா! பள்ளிக்கூடம் போகாமல், படிக்காமல், இந்தக் காலைநேரத்தில் ஆடு மாடு மேய்க்க போகிறீர்களே. பள்ளிக்கூடம் போகலையா?” என்றார்.

”எங்க ஊரிலே பள்ளிக்கூடம் இல்லையே” என்றார்கள்.

”பள்ளிக்கூடம் இருந்தால் படிக்கப் போவீங்களா?” என்றார் காமராஜர்.

”பள்ளிக்கூடம் படிக்கப் போனா எங்களுக்கு மத்தியானச் சோறு யார் போடுவாங்க? இப்படி ஆடு மாடு மேச்சாலாவது கூழோ, கஞ்சியோ கிடைக்குது.” என்றார்கள். பின்னர் அந்தச் சிறுவர்கள் ஆடு மாடுகளை ஓட்டிக் கொண்டு போய்விட்டார்கள்.

காமராஜர் சற்று நேரம் அந்தச் சிறுவர்கள் போவதைப் பார்த்துக்கொண்டே நின்றார். பின்னர் வந்து காரிலே ஏறி தனது பயணத்தை தொடர்ந்தார்.

காரிலே செல்லும்போதே, அவரது சிந்தனை பலமாக இருந்தது. எதைப் பற்றி? கிராமங்கள் தோறும் கல்விக்கூடங்கள் நிறுவப்படவேண்டும் என்பது ஒன்று. அப்படிப் பள்ளிக்கூடம் வைத்தாலும் மதிய உணவுகள் மாணவ - மாணவிகளுக்கு இலவசமாகப் போடவேண்டும். என்பது மற்றொன்று.

செய்தித்தாளில் ”ஒரு பள்ளிச்சிறுமி மதிய வேளையில் மயங்கி விழுந்து விட்டாள். காரணம் பசியே ஆனது.” - என்பதனைப் படித்து இருந்தார் காமராஜர்.
வயிற்றிலே பசியைவைத்துக்கொண்டு, கல்வியிலே எப்படிப் பிள்ளைகளால் கவனம் செலுத்தமுடியும் என்று யோசித்தார் காமராஜர்.

கிராமங்கள் தோறும் ஆரம்பப் பள்ளிகளாக ஓராசிரியர் பள்ளிகள் திறக்கப்பட்டன. இலவச மதிய உணவுகள் பள்ளிப் பிள்ளைகளுக்கு வழங்கப்பட்டன. உடுத்தும் உடைகளால் கூட, ஏழை, பணக்காரப் பிள்ளைகள் என்ற வேறுபாடுகள் இருந்தன. இந்த நிலையைப் போக்க எல்லாப் பிள்ளைகளுக்கும் சீர் உடைகள் கட்டாயமாக்கப்பட்டன. இவைகள் எப்படி ஏற்பட்டன.

பிறப்பு


பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் விருதுநகரிலே ஒரு வியாபாரக் குடும்பத்திலே பிறந்தவர் ஆவார். அந்தக் காலத்தில் அந்த ஊருக்குப் பெயர் விருதுப்பட்டி.

காமராஜர் தாயார் பெயர் சிவகாமி அம்மாள். தந்தையின் பெயர் குமாரசாமி நாடார். அவர் விருதுப்பட்டியிலே தேங்காய் மொத்த வியாபாரம் செய்து வந்தார். சிவகாமி அம்மாளுக்கு இரண்டு சகோதரர்கள். ஒருவர் கருப்பையா நாடார். - இவர் துணிக்கடை வைத்திருந்தார். மற்றொருவர் பெயர் காசிநாராயண நாடார். இவர் திருவனந்தபுரத்திலே மரக்கடை வைத்து நடத்தி வந்தார்.

1903- ஆம் வருடம், ஜுலை மாதம் 15-ஆம் தேதி, காமராஜர் பிறந்தார். அவருக்கு குல தெய்வமான காமாட்சியம்மாளின் பெயரையே முதலில் சூட்டினார்கள்.

கண்ணனைப் பாரதி ”கண்ணம்மா” ஆக்கி அழைத்துப் பாடிப் பரவசப்பட்டது போல் ஆணாகப் பிறந்த காமராஜரை ”காமாட்சி” ஆக்கி அனைவரும் அழைத்து மகிழ்ந்தார்கள்.
தாயார் சிவகாமி அம்மாள் மட்டும், தன் செல்லக் குழைந்தையை ”ராஜா” என்றே அழைத்து வந்தாள். நாளடைவில் காமாட்சி என்ற பெயர் மாறி, ‘காமராஜ்’ என்று ஆனது.
காமராஜருக்குப் பின்னர், சிவகாமி அம்மாள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.நாகம்மாள் என்று அந்தக்குழந்தைக்குப் பெயர் சூட்டினார்கள். காமராஜரும் தங்கையிடம், அன்பும் பாசமும் கொண்டிருந்தார்.

காமராஜர் தனது பள்ளிப் படிப்புக்காலங்களிலேயே, இளம் வயதிலேயே, விருதுப்பட்டியில் நடந்த பொதுக்கூட்டங்களுக்குப் போகலானார். ஆங்கிலேயர்கள் இந்தியாவை அடிமைப்படுத்தி ஆண்டு கொண்டிருந்த காலம் அது. காமராஜர் இளம் வயதில் கேட்ட பொதுக் கூட்டங்களே அவரைப் பிற்காலத்தில் சுதந்திரப் போராட்ட வீரராகக் மாற்றியது.

”தந்தையொடு கல்விபோம்” - என்பதற்கு ஒப்ப, காமராஜரின் தந்தை குமாரசாமி நாடாரின் மறைவிற்குப் பின் காமராஜரின் பள்ளிப்படிப்பு முற்றுப்பெற்றது. வியாபாரங்களில் ஈடுபட்டார். முதலில் துணிக்கடையிலும், பின்னர் திருவனந்தபுரத்தில் மரக்கடை வைத்து நடத்திய காசியாராயண நாடார் மரக்கடையிலும் சிறிது காலம் வியாபாரத்தில் ஈடுபட்டார். அவரது கவனமெல்லாம் தேச விடுதலையிலேயே இருந்தது. வைக்கம் போராட்டத்தில் கலந்து கொண்டார். உப்புச் சத்தியாகிரகத்தில் பங்கு பெற்றார்.
காலப்போக்கில் காமராஜர், சத்தியமூர்த்தி தொண்டனாகி, காங்கிரஸ் பேரியக்க உறுப்பினராகி முழு நேரத் தேசப்பணிக்குத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். விடுதலைப் போரில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

கள்ளுக்கடை மறியல், அந்நியத் துணிகள் பகிஷ்காரம், கொடிப் போராட்டம், உப்பு சத்தியாக்கிரகம், சைமன் கமிஷன் எதிர்ப்பு ஆகியவற்றில் காமராஜர் பங்கேற்றுச் சிறை தண்டனை பெற்றார்.. அடுத்தடுத்துப் போராட்டங்கள் அனைத்திலும் ஈடுபட்டு பலமுறை சிறை தண்டனைகளை அனுபவித்தார் காமராஜர்..

தமிழ்நாடு காங்கிரஸில், ”காமராஜர் காங்கிரஸ்” என்ற நிலை உருவாகியது. காமராஜர் தனது தியாகத்தாலும், சலியாத உழைப்பாலும், தொண்டுகளினாலும் உயர்ந்த நிலையை அடைந்தார்.

1952-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காமராஜர் சாத்தூர் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். சுமார் பன்னிரண்டு ஆண்டுகாலம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்து தமிழ்நாட்டிலே காங்கிரஸ் பேரியக்கத்திற்குப் பெரும் செல்வாக்கை ஏற்படுத்தித் தந்தார்.

1954- ஆம் ஆண்டு காமராஜர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் ஆனார். தலைவர் பதவியைத் துறந்தார். நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் துறந்தார். குடியாத்தம் தொகுதியில் சட்டசபைக்குத் தேர்தலில் நின்று வெற்றி பெற்றார். மேல்சபை உறுப்பினராகி அவர் முதல் அமைச்சர் பதவியை வகித்திருக்கலாம். குறுக்கு வழியில் உள்ளே புகுந்து கொள்ள என்றும் விரும்பாத பெருந்தலைவரே கு. காமராஜர்.

இங்கே நான் காமராஜர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சராகிச் செய்த சாதனைகளையே பட்டியலிட்டு காட்ட முன் வந்திருக்கிறேன். அதிகம் படிக்காத பெருந்தலைவர் காமராஜர் கல்விக்குச் செய்த சாதனைகள் எண்ணிலடங்காதவைகளாகும். ஏழை, எளியவர், உயர்ந்தவர், தாழ்ந்தோர், ஆக எல்லோருக்கும் கல்வி-இலவசக் கல்வி - பட்டி, தொட்டிகளில் எல்லாம் பள்ளிக்கூடங்கள் - இலவச மதிய உணவுச் சீருடைகள், இப்படிப் பலதிட்டங்களைத் தீட்டி அமுல்படுத்தினார் காமராஜர். தமிழகத்தில் கல்விச் செல்வம் பெருகியது. கிராமங்கள் தோறும் ஓராசியர் பள்ளிகள் திறக்கப்பட்டன.

கல்விக் கேள்விகளில் மட்டும் சிறந்து விளங்கினால் போதுமா? நாட்டிலே பஞ்சம், பசி, வேலையில்லாத் திண்டாட்டங்கள் விலகி விடுமா? சிந்தித்தார் காமராஜர். திட்டங்கள் தீட்டினார். நாட்டிலே புதுப் புதுத் தொழிற்சாலைகளை நிறுவச்செய்தார். தொழிற்கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.

காமராஜரின் திட்டங்களால் தமிழ்நாடு முன்னணியில் நின்றது. காமராஜரின் கல்வித் திட்டங்கள் நிறைவேற உடனிருந்து பாடுபட்டவர் அந்நாள் பள்ளிக் கல்வி இயக்குனர் திரு.நெ.து. சுந்தரவடிவேலு ஆவார்.

அதேபோல், காமராஜரின் தொழிற்திட்டங்கள் நிறைவேறக் காரணகர்த்தாவாக இருந்தவர் அன்றைய தொழில் அமைச்சர் திரு. ஆர். வெங்கட்ராமன் ஆவார்.

1957 - ஆம் ஆண்டு பொதுத் தேர்தலிலும் தமிழ்நாட்டில் காங்கிரஸ் அமோக வெற்றிப்பெற்றது. பெருந்தலைவர் காமராஜரே மீண்டும் தமிழ்நாட்டின் முதலமைச்சரானார்.

ஒன்பது ஆண்டுகாலம் தமழக முதலமைச்சராக இருந்த பெருந்தலைவர் காமராஜர், தான் கொண்டு வந்த கே. பிளான் மூலம் தானே முதலமைச்சர் பதவியைத் துறந்தார். அகில இந்திய காங்கிஸ் தலைவரானார்.

பெருந்தலைவர் காமராஜர் ஆண்ட காலத்தைத் தமிழ்நாட்டின் பொற்காலம் என்பார்கள். அந்தக் காலத்தை உங்கள் பார்வைக்கும், படிப்புக்கும் கொண்டு வருவதற்காகவே இந்நூல் வெளியிடப்படுகிறது.

”காமராஜரின் சாதனைகள்” என்னும் இந்த நூலினைக் காமராஜர் நூற்றாண்டு விழா, ஆண்டிலே வெளியிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கதும், பெருமைக்கு உரியதுமாகும்.
பெருந்தலைவர் காமராஜர் சாதனைகளைப் பிள்ளைகள் மட்டுமின்றிப் பெரியவர்களும் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே என்னுடைய ஆசை.

முதலமைச்சராகக் காமராஜர் தமிழகத்தில் ஒன்பது ஆண்டுகாலம் நல்லாட்சி புரிந்தார். கல்விக்கும், தொழிலுக்கும்,காங்கிரஸ் கட்சிக்கும் அவர் செய்த சாதனைகள் கணக்கில் அடங்காதவைகளாகும்.

விருதுநகரிலே ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்து, போதிய கல்வி கற்கவும் வசதியற்ற சூழ்நிலையிலே வளர்ந்து, வாழ்ந்து, பின்னர் அரசியலிலே தொண்டராக ஒரு மாபெரும் கட்சியிலே இணைந்து, தனது உழைப்பால், தொண்டால் படிப்படியாக உயர்ந்தவர் தான் பெருந்தலைவர் காமராஜர். அவரது சாதனைகள் யாவுமே சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தவைகள். .

காமராஜர் வாழ்க்கை வரலாறு

பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் விருதுநகரிலே ஒரு வியாபாரக் குடும்பத்திலே பிறந்தவர் ஆவார். அந்தக் காலத்தில் அந்த ஊருக்குப் பெயர் விருதுப்பட்டி.

காமராஜர் தாயார் பெயர் சிவகாமி அம்மாள். தந்தையின் பெயர் குமாரசாமி நாடார். அவர் விருதுப்பட்டியிலே தேங்காய் மொத்த வியாபாரம் செய்து வந்தார். சிவகாமி அம்மாளுக்கு இரண்டு சகோதரர்கள். ஒருவர் கருப்பையா நாடார். - இவர் துணிக்கடை வைத்திருந்தார். மற்றொருவர் பெயர் காசிநாராயண நாடார். இவர் திருவனந்தபுரத்திலே மரக்கடை வைத்து நடத்தி வந்தார்.

1903- ஆம் வருடம், ஜுலை மாதம் 15-ஆம் தேதி, காமராஜர் பிறந்தார். அவருக்கு குல தெய்வமான காமாட்சியம்மாளின் பெயரையே முதலில் சூட்டினார்கள்.

கண்ணனைப் பாரதி ”கண்ணம்மா” ஆக்கி அழைத்துப் பாடிப் பரவசப்பட்டதுபோல் ஆணாகப் பிறந்த காமராஜரை ”காமாட்சி” ஆக்கி அனைவரும் அழைத்து மகிழ்ந்தார்கள்.
தாயார் சிவகாமி அம்மாள் மட்டும், தன் செல்லக் குழைந்தையை ”ராஜா” என்றே அழைத்து வந்தாள். நாளடைவில் காமாட்சி என்ற பெயர் மாறி, ‘காமராஜ்’ என்று ஆனது.
காமராஜருக்குப் பின்னர், சிவகாமி அம்மாள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.நாகம்மாள் என்று அந்தக்குழந்தைக்குப் பெயர் சூட்டினார்கள். காமராஜரும் தங்கையிடம், அன்பும் பாசமும் கொண்டிருந்தார்.

காமராஜர் தனது பள்ளிப் படிப்புக்காலங்களிலேயே, இளம் வயதிலேயே, விருதுப்பட்டியில் நடந்த பொதுக்கூட்டங்களுக்குப் போகலானார். ஆங்கிலேயர்கள் இந்தியாவை அடிமைப்படுத்தி ஆண்டு கொண்டிருந்த காலம் அது. காமராஜர் இளம் வயதில் கேட்ட பொதுக் கூட்டங்களே அவரைப் பிற்காலத்தில் சுதந்திரப் போராட்ட வீரராகக் மாற்றியது.

”தந்தையொடு கல்விபோம்” - என்பதற்கு ஒப்ப, காமராஜரின் தந்தை குமாரசாமி நாடாரின் மறைவிற்குப் பின் காமராஜரின் பள்ளிப்படிப்பு முற்றுப்பெற்றது. வியாபாரங்களில் ஈடுபட்டார். முதலில் துணிக்கடையிலும், பின்னர் திருவனந்தபுரத்தில் மரக்கடை வைத்து நடத்திய காசியாராயண நாடார் மரக்கடையிலும் சிறிது காலம் வியாபாரத்தில் ஈடுபட்டார். அவரது கவனமெல்லாம் தேச விடுதலையிலேயே இருந்தது. வைக்கம் போராட்டத்தில் கலந்து கொண்டார். உப்புச் சத்தியாகிரகத்தில் பங்கு பெற்றார்.
காலப்போக்கில் காமராஜர், சத்தியமூர்த்தி தொண்டனாகி, காங்கிரஸ் பேரியக்க உறுப்பினராகி முழு நேரத் தேசப்பணிக்குத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். விடுதலைப் போரில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

கள்ளுக்கடை மறியல், அந்நியத் துணிகள் பகிஷ்காரம், கொடிப் போராட்டம், உப்பு சத்தியாக்கிரகம், சைமன் கமிஷன் எதிர்ப்பு ஆகியவற்றில் காமராஜர் பங்கேற்றுச் சிறை தண்டனை பெற்றார்.. அடுத்தடுத்துப் போராட்டங்கள் அனைத்திலும் ஈடுபட்டு பலமுறை சிறை தண்டனைகளை அனுபவித்தார் காமராஜர்..

தமிழ்நாடு காங்கிரஸில், ”காமராஜர் காங்கிரஸ்” என்ற நிலை உருவாகியது. காமராஜர் தனது தியாகத்தாலும், சலியாத உழைப்பாலும், தொண்டுகளினாலும் உயர்ந்த நிலையை அடைந்தார்.

1952-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காமராஜர் சாத்தூர் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். சுமார் பன்னிரண்டு ஆண்டுகாலம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்து தமிழ்நாட்டிலே காங்கிரஸ் பேரியக்கத்திற்குப் பெரும் செல்வாக்கை ஏற்படுத்தித் தந்தார்.

1954- ஆம் ஆண்டு காமராஜர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் ஆனார். தலைவர் பதவியைத் துறந்தார். நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் துறந்தார். குடியாத்தம் தொகுதியில் சட்டசபைக்குத் தேர்தலில் நின்று வெற்றி பெற்றார். மேல்சபை உறுப்பினராகி அவர் முதல் அமைச்சர் பதவியை வகித்திருக்கலாம். குறுக்கு வழியில் உள்ளே புகுந்து கொள்ள என்றும் விரும்பாத பெருந்தலைவரே கு. காமராஜர்.

இங்கே நான் காமராஜர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சராகிச் செய்த சாதனைகளையே பட்டியலிட்டு காட்ட முன் வந்திருக்கிறேன். அதிகம் படிக்காத பெருந்தலைவர் காமராஜர் கல்விக்குச் செய்த சாதனைகள் எண்ணிலடங்காதவைகளாகும். ஏழை, எளியவர், உயர்ந்தவர், தாழ்ந்தோர், ஆக எல்லோருக்கும் கல்வி-இலவசக் கல்வி - பட்டி, தொட்டிகளில் எல்லாம் பள்ளிக்கூடங்கள் - இலவச மதிய உணவுச் சீருடைகள், இப்படிப் பலதிட்டங்களைத் தீட்டி அமுல்படுத்தினார் காமராஜர். தமிழகத்தில் கல்விச் செல்வம் பெருகியது. கிராமங்கள் தோறும் ஓராசியர் பள்ளிகள் திறக்கப்பட்டன.

கல்விக் கேள்விகளில் மட்டும் சிறந்து விளங்கினால் போதுமா? நாட்டிலே பஞ்சம், பசி, வேலையில்லாத் திண்டாட்டங்கள் விலகி விடுமா? சிந்தித்தார் காமராஜர். திட்டங்கள் தீட்டினார். நாட்டிலே புதுப் புதுத் தொழிற்சாலைகளை நிறுவச்செய்தார். தொழிற்கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.

காமராஜரின் திட்டங்களால் தமிழ்நாடு முன்னணியில் நின்றது. காமராஜரின் கல்வித் திட்டங்கள் நிறைவேற உடனிருந்து பாடுபட்டவர் அந்நாள் பள்ளிக் கல்வி இயக்குனர் திரு.நெ.து. சுந்தரவடிவேலு ஆவார்.

அதேபோல், காமராஜரின் தொழிற்திட்டங்கள் நிறைவேறக் காரணகர்த்தாவாக இருந்தவர் அன்றைய தொழில் அமைச்சர் திரு. ஆர். வெங்கட்ராமன் ஆவார்.

1957 - ஆம் ஆண்டு பொதுத் தேர்தலிலும் தமிழ்நாட்டில் காங்கிரஸ் அமோக வெற்றிப்பெற்றது. பெருந்தலைவர் காமராஜரே மீண்டும் தமிழ்நாட்டின் முதலமைச்சரானார்.

ஒன்பது ஆண்டுகாலம் தமழக முதலமைச்சராக இருந்த பெருந்தலைவர் காமராஜர், தான் கொண்டு வந்த கே. பிளான் மூலம் தானே முதலமைச்சர் பதவியைத் துறந்தார். அகில இந்திய காங்கிஸ் தலைவரானார்.

பெருந்தலைவர் காமராஜர் ஆண்ட காலத்தைத் தமிழ்நாட்டின் பொற்காலம் என்பார்கள். அந்தக் காலத்தை உங்கள் பார்வைக்கும், படிப்புக்கும் கொண்டு வருவதற்காகவே இந்நூல் வெளியிடப்படுகிறது.

”காமராஜரின் சாதனைகள்” என்னும் இந்த நூலினைக் காமராஜர் நூற்றாண்டு விழா, ஆண்டிலே வெளியிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கதும், பெருமைக்கு உரியதுமாகும்.
பெருந்தலைவர் காமராஜர் சாதனைகளைப் பிள்ளைகள் மட்டுமின்றிப் பெரியவர்களும் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே என்னுடைய ஆசை.

முதலமைச்சராகக் காமராஜர் தமிழகத்தில் ஒன்பது ஆண்டுகாலம் நல்லாட்சி புரிந்தார். கல்விக்கும், தொழிலுக்கும்,காங்கிரஸ் கட்சிக்கும் அவர் செய்த சாதனைகள் கணக்கில் அடங்காதவைகளாகும்.

விருதுநகரிலே ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்து, போதிய கல்வி கற்கவும் வசதியற்ற சூழ்நிலையிலே வளர்ந்து, வாழ்ந்து, பின்னர் அரசியலிலே தொண்டராக ஒரு மாபெரும் கட்சியிலே இணைந்து, தனது உழைப்பால், தொண்டால் படிப்படியாக உயர்ந்தவர் தான் பெருந்தலைவர் காமராஜர். அவரது சாதனைகள் யாவுமே சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தவைகள்.